இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் காலமானார்: ஆளுநர் நேரில் அஞ்சலி; முதல்வர் இரங்கல்
சென்னை: இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் காலமானார். அவருக்கு தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியாக பதவி வகித்தவர் சுந்தரராஜன் பத்மநாபன்(83).
இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1940-ம் ஆண்டு டிச.5-ம் தேதிபிறந்தார். 1959-ம் ஆண்டு இந்திய ராணுவ அகாடமியில் பட்டம் முடித்த அவர் ராணுவ பீரங்கிப் படைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரி, புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்புகல்லூரியிலும் பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு போர்களில்வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவில் பணியாற்றியுள்ளார்.
இவர் பல்வேறு படைப் பிரிவுகளில் பணியாற்றி உள்ளார். கடந்த 2000 செப்.30-ம்தேதிமுதல் 2002 டிச.31-ம் தேதிவரை இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றி உள்ளார். 43 ஆண்டுகள்பணிக்கு பிறகு 2002 டிச.31-ம்தேதி ஓய்வு பெற்றார். அதன்பின்னர் சென்னை, அடையாறில் குடும்பத்தினருடன் வசித்துவந்த அவர் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.
இதற்கிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அடையாறில் உள்ள சுந்தரராஜன் பத்மநாபன் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல்,தமிழக அரசு சார்பில், மா.சுப்பிரமணியன், தக்ஷிணபாரத ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரன்பிர்சிங் பிரார் ஆகியோர் நேரில்சென்று அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபனின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது முன்மாதிரியான தலைமையும், தேசத்தின் பாதுகாப்புக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்.
இந்த இக்கட்டானநேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். சுந்தரராஜன் பத்மநாபனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.