தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக தொழில்துறை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழ்நாடு தொழில் முதலீடு மாநாட்டை முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
அதனை தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட 19 தொழில் நிறுவனங்கள் இன்று திட்டங்களை தொடங்குகின்றன. அதன்படி ரூ,17 ஆயிரத்து 616 கோடி முதலீடுகளுக்கான தொடக்க விழா நடக்கிறது. இதன் மூலம் ஏறத்தாழ 65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்டு ரூ,51 ஆயிரம் கோடிக்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.
ஒட்டுமொத்தமாக ரூ,68 ஆயிரத்து 873 கோடிக்கு மேல் திட்டங்கள் இன்று தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.