“நடிகர் விஜய் கட்சி தொடங்கி கொடியை அறிமுகம் செய்ததை வரவேற்கிறோம்” – எல்.முருகன்
நாகர்கோவில்: “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் கட்சி துவங்கி கொடியை அறிமுகப்படுத்தி இருப்பதை வரவேற்கிறோம்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. மம்தா பானர்ஜி குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவின் பேரில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த மாநில அரசின் கையில் உள்ளது. நமக்காக மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். எல்லை தாண்டி செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
மீனவர்கள் மீது மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. மீனவர்களின் மேம்பாட்டுக்காக மீன்பிடி துறைமுகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்ததே பாஜக தான்.
ஜனநாயக நாட்டில் மக்கள் சேவைக்காக யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி துவங்கலாம். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி கொடியை அறிமுகம் செய்ததை நாங்கள் வரவேற்கிறோம்'' என்றார். பேட்டியின்போது எம்ஆர் காந்தி எம்எல்ஏ., பாஜக குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.