இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இருவேறு பேருந்து விபத்துகளில் முஸ்லிம் யாத்ரீகா்கள் 11 உள்பட 40 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஈராக்கின் கர்பாலா பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம் பிரிவினர் புனித யாத்திரையை முடித்துக்கொண்டு ஈராக் வழியாக பஞ்சாப் மாகாணத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மக்ரான் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்தவர்களில் 11 பேர் பலியாகினர், 35 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் பலியான பயணிகளில் பெரும்பாலானோர் லாகூர் அல்லது குஜ்ரன்வாலாவை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
29 பேர் பலி
மற்றொரு விபத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 35 பேருடன் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, நிர்வாகம் மற்றும் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.