இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள அண்டை நாடான லெபனானிலிருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ’ஹிஸ்புல்லா’ அமைப்பு, ஞாயிற்றுக்கிழமை(ஆக. 25) அதிகாலை 300க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தத் தயாராக இருந்ததை இஸ்ரேல் பாதுகாப்புப் படை கண்டறிந்ததாகவும், இதையடுத்து, அதை முறியடிக்க லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைத் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெற்கு லெபனான் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர், இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ராக்கெட் ஏவுகணை தாக்குதல்களை ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லா நிகழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடி தாக்குதல்களை ஞாயிற்றுக்கிழமை நடத்தியுள்ளது.
இதன்காரணமாக, அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து, இஸ்ரேலில் அடுத்த 48 மணி நேரத்துக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அறிவிக்கப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இஸ்ரேலில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது. ஹிஸ்புல்லா உடனான சண்டையைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேல் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஹிஸ்புல்லா – இஸ்ரேல் இடையேயான தொடர் தாக்குதல்களில், லெபனானில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இஸ்ரேலை பாதுகாக்க அனைத்துவித பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம். நம்மை யார் காயப்படுத்துகிறார்களோ அவர்களை தாக்குவோம்” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இன்றைய தாக்குதல்களில் சுமார் விமானப்படையை சேர்ந்த சுமார் 100 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் மீதான முதல்கட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும், வடக்கு இஸ்ரேல் மட்டுமன்றி உள்நாட்டிலும் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.