நாகப்பட்டினம்: நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் தனது மகன் மணிகண்டபிரபு, அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் ஆகியோருடன் நேற்று காலை 11 மணிக்கு மீன்பிடிக்க சென்றார்.
இந்த நிலையில் நேற்று மாலை கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்கள் கொண்டு மீனவர்களை மிரட்டியுள்ளனர்.
அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!
இதனால் அச்சமடைந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்கள் பட்டாக்கத்தி கொண்டு வெட்டி, ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இரண்டரை லட்சம் மதிப்பிலான படகின் என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட ரூ. 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடி தப்பிச்சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, வெட்டு காயங்களுடன் செருதூர் மீன்பிடி இறங்குதளம் வந்து சேர்ந்த மீனவர்களை மீட்க சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பிடித்த மீன்களை கேட்டு மிரட்டியதாகவும், இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண் கயிறு முதற்கொண்டு எடுத்து சென்றதாகவும் வேதனை தெரிவித்துள்ள காயமடைந்த மீனவர்கள், நடுக்கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கரைசேர்ந்த மீனவர்களை கண்டு கரையில் காத்திருந்த மீனவ பெண்கள் கதறி அழுதனர்.