Wednesday, September 25, 2024

கர்ப்ப காலத்தில் கடுமையான வாந்தி ஏன்? என்ன செய்யலாம்?

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

ஹேமந்த் குமார் ரௌத்

கர்ப்பிணிகள் பெரும்பாலானோருக்கு முதல் மூன்று மாதங்களில் குமட்டல், வாந்தி இருக்கும். மூன்று மாதங்களுக்குப் பின் சிலருக்கு இது படிப்படியாகக் குறைந்துவிடும். ஆனால் சிலருக்கு அந்த கர்ப்ப காலம் முழுவதும் இருக்கும். இவ்வாறு தீவிரமாக குமட்டல், வாந்தி இருக்கும்பட்சத்தில் அது 'ஹைபிரேமெசிஸ் கிராவிடரம்' (Hyperemesis gravidarum) அதாவது 'தீவிர கர்ப்ப கால வாந்தி' எனப்படுகிறது.

இதனால் உடலில் நீரிழப்பு, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை, எடை இழப்பு ஏற்படும். மேலும், கர்ப்பிணிகளின் உடல்நிலையை பாதிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் இதன் பாதிப்பு ஒவ்வொருவரிடமும் மாறுபட்டுக் காணப்படுகிறது. தாய் மற்றும் கருவின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால் கர்ப்பிணிகள் கவலையடைகிறார்கள்.

80% – க்கும் அதிகமான கர்ப்பிணிகளுக்கு காலையில் சோர்வு ஏற்படுகிறது. இது சமாளிக்கக் கூடியதுதான். ஆனால், சோர்வு, குமட்டல், வாந்தி தீவிரமாக இருந்தால் மருத்துவ சிகிச்சை அவசியம் என்கின்றனர்.

தீவிர கர்ப்ப கால வாந்தி

முதல் மூன்று மாதங்களுக்கு வாந்தி இருந்தால் அது சாதாரணமானதுதான். ஆனால், 9 மாதங்கள் முழுவதும் இருந்தால் இதனை 'தீவிர கர்ப்ப கால வாந்தி' என மருத்துவர்கள் அங்கீகரிக்கின்றனர். இது சிலருக்கு இன்னும் கடுமையானதாகவும் இருக்கலாம். சுமார் 0.3% முதல் 3% கர்ப்பிணிப் பெண்கள் இதனால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தயிர் சாப்பிட்டால் சளி ஏற்படுமா? – நம்பிக்கையும் உண்மையும்!

புவனேஸ்வரம் எய்ம்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் துறையின் தலைவரான டாக்டர் ஸ்வேதா சிங் கூறுகையில், 'கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு குமட்டல், வாந்தி ஏற்படும், இது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் மிகவும் பொதுவானது. ஆனால் அவர்களில் சிலர் தீவிர வாந்தியினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு பல முறை வாந்தி இருக்கும். உடல் எடை குறையும். எடை இழப்பினால் கீட்டோனேமியா ஏற்படுகிறது. (கீட்டோனேமியா என்பது ரத்தத்தில் உள்ள கீட்டோன்களின் அளவு அதிகரிப்பது) இதனால் தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், சோர்வு உள்ளிட்ட பல அறிகுறிகள் இருக்கும்' என்றார்.

காரணங்கள், அறிகுறிகள்

'தீவிர கர்ப்ப கால வாந்தி ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. இருப்பினும், மரபணு, ஹார்மோன்களில் மாற்றம், அடிப்படை உடல்நலப் பிரச்னைகள் உள்ளிட்டவை காரணிகளாக இருக்கின்றன.

குடும்பத்தில் வேறு யாரேனுக்கும் இருந்தால் வாரிசுகளுக்கும் வாந்தி ஏற்படலாம். ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கும் வரலாம். இதன் காரணமாக நஞ்சுக்கொடியின் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றும் கூறினார்.

ஜகன்னாத் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சங்கமித்ரா சதாபதி, 'கர்ப்ப காலத்தில் உருவாகும் ஹெச்சிஜி(HCG) மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு உயரும்போது தீவிரமான வாந்தி ஏற்படலாம். இதனால் தைராய்டு, இரைப்பை, குடலில் பிரச்னைகள் ஏற்படுத்தலாம். ஈஸ்ட்ரோஜன் கொண்ட மருந்துகளை உட்கொள்வதாலும் ஒற்றைத் தலைவலி கொண்டவர்களுக்கும் தீவிர வாந்தி ஏற்படலாம்' என்றார்.

திடீர் உடல் பருமன்/எடை இழப்பினால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

சிக்கல்கள்

'தீவிர வாந்தி கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும், இல்லையெனில் கடுமையான சிக்கல்கள் உருவாகலாம். கர்ப்பிணியின் உடல் எடை 7 கிலோவுக்கும் கீழ் குறைந்தால் குறை பிரசவம் அல்லது கருவில் உள்ள குழந்தையின் எடை குறையும். மேலும், சிகிச்சை பெறாவிட்டால் குழந்தை பிறந்தபின்னரும் உடலில் சத்துகள் குறைந்து தாய்மார்கள் தொடர்ச்சியாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்படுவார்கள். கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக பிரச்னைகள் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் மூளைக் கோளாறு, நீரிழிவு நோய், அரிதான ரத்தப்போக்கு போன்றவை ஏற்படும்' என்று கூறுகிறார்.

நஞ்சுக்கொடி செயலிழப்பு, ப்ரீக்ளாம்ப்சியா, கரு வளர்ச்சியில் தடை , உணவுக்குழாயில் சிதைவு, இரத்த உறைவு உள்ளிட்ட பல சிக்கல்கள் ஏற்படலாம் என்று கூறுகிறார்.

சிகிச்சை, தடுக்கும் முறைகள்

தாய், குழந்தை இருவரின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தீவிர வாந்தி இருந்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கைமுறையிலும் மாற்றங்களும் வேண்டும்.

கர்ப்பிணிகள் குமட்டல், வாந்திக்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது, நீர் ஆகாரங்கள் அருந்துவதை பரிந்துரைக்கின்றனர்.

வாய்வழியாக சாப்பிட முடியவில்லை என்றால் மருத்துவர்களின் உதவியுடன் குழாய் மூலமாக உணவு எடுக்கலாம். அவரவர்க்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவது, பிடிக்காத, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளைத் தவிர்ப்பது என உணவு முறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

குழந்தைப் பிறப்பினால் ஆண்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும்!

கருவுறுவதற்கு முன்னதாக ஒரு மாதம் போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் கர்ப்ப காலத்தில் வாந்தி குறையும். குழந்தைக்கு திட்டமிடும்போதே எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விடலாம்.

இதனால் கருவின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது. பிறவிக் குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக நரம்புக் குழாய் குறைபாடுகள், கர்ப்ப கால குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் ஆகியவற்றின் தீவிரத்தைக் குறைக்கும் என்றார்.

தமிழில்: எம். முத்துமாரி

You may also like

© RajTamil Network – 2024