Saturday, September 28, 2024

போலீசுக்கு பயந்து குளத்தில் குதித்த பசு கடத்தல் குற்றவாளி தண்ணீரில் மூழ்கி பலி

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பசுக்களை கடத்தும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கையில் மாநில போலீசார் பசு பாதுகாப்புப்படை என்ற தனிப்பிரிவை அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அம்மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டம் மடோல்பூர் என்ற கிராமத்தில் பசு கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பசு கடத்தல் கும்பலை சேர்ந்த வாசிம் என்ற நபர் பைக்கில் வந்துள்ளார். அவர் போலீசாரை பார்த்ததும் பைக்கில் இருந்து இறங்கி தப்பியோடியுள்ளார். இதனால், வாசிமை போலீசார் விரட்டிச்சென்றுள்ளனர். போலீசாருக்கு பயந்து வாசிம் அருகில் உள்ள குளத்தில் குதித்துள்ளார்.

குளத்தில் குதித்த அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆனால், போலீசார் தாக்கியதாலேயே வாசிம் உயிரிழந்ததாக மடோல்பூர் கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், குளத்தில் மூழ்கி உயிரிழந்த வாசிமின் உடலை போலீசிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதையடுத்து, கிராம மக்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர். மேலும், வாசிமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024