Saturday, September 28, 2024

கள்ளக்காதலன் பேசாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

சித்தூர்,

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் விஜயாபுரத்தைச் சேர்ந்தவர் ஷெரீப். இவரின் மகள் தில்ஷாத் (வயது 30). இவர் கடந்த சில நாட்களாக தனது கணவரை விட்டு பிரிந்து தந்தையோடு வசித்து வந்தார். தில்ஷாத்துக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்தநிலையில் விஜயாபுரம் மண்டலம் வீராபுரத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் அசோக் (27) என்பவருக்கும், தில்ஷாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்களின் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். 2 பேரும் 3 மாதங்களுக்கு முன்பு திருப்பதி மாவட்டம் பிச்சாட்டூர் பஜார் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், அசோக் கடந்த 3 நாட்களாக தில்ஷாத்திடம் பேசாமல் இருந்துள்ளார். தில்ஷாத் பலமுறை போனில் அழைத்தும் அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த தில்ஷாத் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தில்ஷாத்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பிச்சாட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024