லிவ்வர் டாக்டர் என்று அறியப்படும் மருத்துவருடன் சமூக வலைதளத்தில் எழுந்த கருத்துப் போரில், தன்னை எப்போதும் சங்கி என்று கூறுவார்கள், இப்போது இப்படி சொல்லியிருப்பது மகிழ்ச்சியே என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸோஹோ தலைமை செயல் நிர்வாகி ஸ்ரீதர் வேம்பு.
கடந்த வாரம் எக்ஸ் பக்கத்தில், வெறுங்காலில் நடப்பது குறித்து கருத்து மோதல், டாக்டர் சைரியாக் ஆபி பிலிப்ஸ் – ஸோஹோ தலைமை செயல் நிர்வாகி ஸ்ரீதர் வேம்பு இடையே கருத்துப் போர் மூண்டது. கிட்டத்தட்ட 3 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பவர் கல்லீரல் மருத்துவர். இவர் ஸ்ரீதர் வேம்புவின் வெறுங்காலில் நடப்பது நன்மை பயக்கும் என்ற கருத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். பூமர் அங்கிள் என்று ஸ்ரீதர் வேம்புவை குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு, ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இரண்டாம் உலகப் போரின்போது அதாவது 1946 – 64ஆம் ஆண்டு காலத்தில், அமெரிக்காவில் அதிகக் குழந்தைகள் பிறந்தன. அதனை பேபி பூம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த பூம் என்ற வார்த்தையைத்தான் தற்போது அதிகமாக அந்த காலக் கட்டத்தில் பிறந்தவர்களை அவமானப்படுத்தும் வகையில் பூமர் அங்கிள், பூமர் ஆண்டி என்று தற்போதைய இளைய தலைமுறையினர் விமர்சித்து வருகிறார்கள்.
அமெரிக்காவில், இளம் தலைமுறை, அவர்களது பெற்றோரிடம் "நீங்கள் நல்ல வேலையில், நல்ல வாழ்க்கையில் இருந்தும் கடன்களை வைத்திருந்தீர்கள், நாங்கள் இப்போது மோசமான வேலைகளையும் குறைந்த வருமானத்தையும் பெறுகிறோம், எங்களால் ஒரு வீட்டைக் கூட வாங்க முடியவில்லை" என்பதற்காக "பூமர்" என்ற வார்த்தையை மூத்தவர்களை அவமதிக்கும் வகையில் இளைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் இளம் தலைமுறையினர், தங்களது பெற்றோரை விட பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களது பெற்றோர், இளமைப் பருவத்தில் இருந்தபோது அற்ப ஊதியம் மற்றும் நீண்ட பணி நேரம் இருந்தது. எனவே "பூமர்" என்பதற்கு இந்தியாவில் அர்த்தம் இல்லை.
இந்தியாவிற்கு ஏராளமான அவமானங்களை சந்திக்கலாம் – நான் "சங்கி" என்று அழைக்கப்படுவேன், எனவே, இப்போது பூமர் அங்கிள் என்பது, குறைந்தபட்ச அவமானம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!
ஆனால் "பூமர்" – என்று சொல்வதை, இளைஞர்களே, நாம் நவீன உலகத்துக்கு மாறிவிட்டதாக நினைத்து சொல்கிறீர்கள். மேலும், இதன் மூலம் உங்களுக்கு அமெரிக்க மொழி தெரியும் என்பதைக் காட்டிக்கொள்ள முனைகிறீர்கள். ஆனால் இதையெல்லாம் பார்த்தால், நீங்கள் வேறு கலாச்சாரத்திற்கு அடிமையாகிவிட்டீர்கள், இங்கு எந்தத் தொடர்பும் இல்லாத இந்தியாவில் அர்த்தமற்ற சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்,
சொல்லப்போனால், நான் தொழில்நுட்ப ரீதியாக ஒரு பூமரனாக கூட தகுதி பெறவில்லை – நான் மிகவும் தாமதமாக பிறந்தேன், நான் அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று மிக விளக்கமாக தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதாவது, வெறுங்காலில் நடப்பது உடல் நலனுக்கு நன்மை பயக்குமா? பயக்காதா? என்பது குறித்த கருத்தில், புகழ்பெற்ற கல்லீரல் மருத்துவருக்கும், ஸோஹோ நிர்வாகி ஸ்ரீதர் வேம்புவுக்கும் இடையே கடந்த வாரம் கடுமையான மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரின் கருத்தை மற்றொருவர் கடும் சொற்களால் விமர்சித்திருந்தனர்.
அவ்வப்போது சமூகத்துக்கும், உடல் நலனுக்கும் பல நல்ல பயனுள்ள தகவல்களை ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டு வருவார். அவரை பின்தொடர்வோர், அவரது கருத்துகளையும் அதிகம் விரும்பி பின்பற்றி வருகிறார்கள். அதுபோல கல்லீரல் மருத்துவரும் உடல் நலன் குறித்த குறிப்புகளை வெளியிடுவார். ஆனால், அவை பெரும்பாலும் இந்திய மருத்துவ முறைகளுக்கும், கை வைத்தியம், நமது மூதாதையரின் நம்பிக்கை போன்றவற்றுக்கு எதிராகவே இருக்கும். அவரது கூற்றுப்படி, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத எதையும் அவர் ஏற்க மாட்டார்.
இந்த நிலையில்தான், வெறுங்காலுடன் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஸோஹோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அதனை கடுமையாக விமர்சனம்ம் செய்திருந்த டாக்டர் பிலிப்ஸ் "போலி அறிவியல்" என்றும் "மருத்துவ அறிவற்றவர்" என்றும் விமர்சித்திருந்தார்.
சில ஆண்டு காலமாக, தான் வெறுங்காலில் நடக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும், தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவிந்தபேரி கிராமத்தில், தனது பண்ணை நிலத்தில் வெறுங்காலில் நடப்பதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.
மற்றவர்களும் இதுபோல, வெறுங்காலில் நடக்க பழகலாம் என்றும், இது பூமிக்கும், மனிதர்களுக்கும் ஒரு நேரடியான இணைப்பை ஏற்படுத்தி, உடல் நலனுக்கு பல்வேறு பயன்களை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், கல்லீரல் மருத்துவர் என சமூக ஊடங்களில் அறியப்படும் டாக்டர் பிலிப் இதனை ஏற்கவில்லை. இவர் எதிர்க்கருத்தைப் பதிவிட, சமூக வலைத்தளத்திலேயே இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். மனித மின் அதிர்வெண்களுக்கும் பூமிக்கும் இடையே ஒரு தொடர்பை முன்வைக்கும் 'கிரவுண்டிங்' யோசனையை பிலிப் மறுத்துவிட்டார். இது நிரூபிக்கப்படாத கருத்து என்று கூறியதோடு, கால் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயமும், பல உடல்நலப் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அறிவியல்பூர்வமாக எந்த பலனும் மனிதனுக்கு ஏற்படாது. இது தொடர்பான பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு பயனற்றதாகவே முடிந்துள்ளது என்றும் வேம்புவின் சமூகப் பதிவை மேற்கோள்காட்டி பதிவிட்டிருந்தார்.
மேலும், 'இந்திய சுகாதாரத்துறையின் மிகப்பெரிய சவால், விழிப்புணர்வு சிந்தனை, திறன்களை மக்களுக்கு ஏற்படுத்திவதில்கூட இல்லை, ஆனால் வேம்பு போன்ற உடல்நலம் தொடர்பான கல்வியறிவு இல்லாத பூமர் அங்கிள்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதை சாமானிய மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதில்தான் உள்ளது என்று பிலிப் கடுமையாக விமர்சித்திருந்தார்.
பதிலுக்கு, வேம்பு கடுமையான பதிலடியைக் கொடுத்திருந்தார். "திமிர்பிடித்த மருத்துவர்களிடமிருந்து விலகி இருங்கள்" என்று தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு அறிவுறுத்தினார். அவர் அதில் கூறியிருந்தாவது, "எனக்குத் தெரிந்த சிறந்த மருத்துவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அடக்கமானவர்கள், ஏனென்றால் மனித உடல் எவ்வளவு சிக்கலானது மற்றும் எவ்வளவு சவாலானது என்பது அவர்களுக்குத் தெரியும். உடலும் மனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதும் அவர்களுக்குத் தெரியும் என்று கூறி வார்த்தைப் போருக்கு எண்ணெய் ஊற்றியிருந்தார். இவ்வாறே சமூக ஊடகத்தில் இவர்களது மோதல் தொடர்ந்து வந்தது.