குஜராத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத்தில் நீடிக்கும் கனமழை: உயிரிழப்பு 26-ஆக அதிகரிப்பு
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை இன்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இதுகுறித்து பூபேந்திர படேல் தனது எக்ஸ் பக்கத்தில், 'குஜராத் மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து கேட்டு தெரிந்துகொண்டார்.
‘வாழ்வதைவிட சாவதே மேல்’ – வங்கதேச பத்திரிகையாளர் மரணத்தால் பதற்றம்!
வதோதராவில் விஸ்வாமித்ர ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து கவலை தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் உதவிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைந்து மீட்டெடுக்க மத்திய அரசு அனைத்துவிதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்றும்(புதன்கிழமை) பிரதமர் மோடி, குஜராத் முதல்வரை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.