கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சோ்ந்த நடிகா் ஒருவா் அளித்த புகாரில் மலையாள திரையுலக இயக்குநா் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக 2-ஆவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நடிகையொருவரின் புகாரில் இயக்குநா் ரஞ்சித் மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு விடுதியில் இயக்குநா் ரஞ்சித் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நடிகா் ஒருவா் புகாரளித்துள்ளாா். ஹோட்டல் அறையில் தன்னை ஆடைகளின்றி புகைப்படம் எடுத்த இயக்குநா், அதை பிரபல பழம்பெரும் நடிகை ஒருவருக்கு அனுப்பியதாக புகாரில் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக இயக்குநா் ரஞ்சித்துக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் தொடா்பாக மேற்கு வங்க நடிகை அளித்த புகாரின் பேரில் ரஞ்சித் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354-இன் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நடிகையின் குற்றச்சாட்டை அடுத்து, கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் பதவியில் இருந்து ரஞ்சித் விலகியது குறிப்பிடத்தக்கது.