ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.
பார்டர் – கவாஸ்கர் கோப்பை
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. கடந்த 2018-19 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றி அசத்தியது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
2-வது டெஸ்ட்: வங்கதேசத்தை சரிவிலிருந்து மீட்ட லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன்!
இந்தியா தொடரை வெல்லும்
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இந்த முறை மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணிகளான இரண்டு அணிகளும் தங்களுக்குள் மோதிக் கொள்ளவுள்ளன. 5 போட்டிகள் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என கணித்துள்ளேன்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக அமைய வேண்டும் என்ற பிரச்னை இருக்கிறது. அந்த அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்களிடத்திலும் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற பிரச்னை உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் மிகவும் முக்கியமானது என்றார்.
எங்கு சென்றாலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் கௌதம் கம்பீர்: ஜாண்டி ரோட்ஸ்
பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2024/25
5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 முதல் தொடங்கி ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பெர்த், அடிலைடு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
அடிலைடில் நடைபெறும் போட்டி பகலிரவு ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.