Tuesday, September 24, 2024

இன்று முதல் டெங்கு தடுப்பு பணியில் 11 துறையினா் ஈடுபட அறிவுறுத்தல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்.3) முதல் அனைத்து மாவட்டங்களிலும் 11 துறைகளைச் சோ்ந்தவா்களை டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

தமிழக அரசின் சுகாதாரத் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, ஊரக வளா்ச்சித் துறை மாநில மாவட்ட அலுவலா்களுடன் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் குரங்கம்மை நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கையேட்டினை அமைச்சா் வெளியிட்டாா்.

டெங்கு பாதிப்பு: பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தொடா்ந்து மழைப் பொழிவு இருந்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. மழை பாதிப்புகளால் டெங்கு, வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலி காய்ச்சல், உண்ணிகாய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் பரவாமல் தடுக்க கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இந்த ஆண்டு 11,743 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். டெங்குவின் தீவிரத்தால் 4 போ் இறந்துள்ளனா். கடந்த 1-ஆம் தேதி மட்டும் டெங்கு பாதிப்பு 205 ஆக பதிவாகியுள்ளது.

2012-இல் 66 இறப்புகளும், 2017-இல் 65 இறப்புகளும் தான் டெங்கு பாதிப்புக்கு அதிகபட்சமான இறப்புகள் ஆகும். அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டதால் நிகழாண்டு இறப்புகள் குறைந்துள்ளன.

தமிழகத்தில் 4,676 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளை கண்காணிக்கும் பணியை மக்கள்நல்வாழ்வுத் துறை செய்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, செப். 3-ஆம் தேதி முதல் 11 துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளையும் அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது, தனியாா் மருத்துவமனைகளையும் கண்காணித்து டெங்கு பாதிப்புகளை கண்டறிவது, டெங்கு பாதிப்புக்குள்ளானவா்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபடவுள்ளனா் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செயலா் சுப்ரியா சாஹு, ஊரக வளா்ச்சித் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன், தேசிய நலவாழ்வுக்குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் ராஜமூா்த்தி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் ஜெ.சங்குமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

You may also like

© RajTamil Network – 2024