பிரதமர் மோடி இன்று(செப். 3) காலை புரூனே நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். புதுதில்லியிலிருந்து புரூனே தலைநகர் பந்தார் செரி பேகவானுக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார் மோடி. அதனைத் தொடர்ந்து, புரூனேயிலிருந்து சிங்கப்பூருக்கு புதன்கிழமை(செப். 4) செல்கிறார் பிரதமர் மோடி.
பிரதமரின் வெளிநாட்டு பயணத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு, பிரதமர் ஒருமுறைகூட செல்லவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரதமரின் சிங்கப்பூர் பயணத்தை விமர்சித்துள்ளார்.
”புரூனே செல்வதை வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், பாதிப்புகளைச் சந்தித்துள்ள மணிப்பூருக்கு எப்போது மனிதாபிமான ரீதியிலான பயணத்தை மேற்கொள்வார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
”மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறுவதைப் போல, அங்குள்ள நிலவரம் இல்லை, மாறாக, பதற்றமான நிலைமையே மணிப்பூரில் தொடருகிறது” என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
“மணிப்பூர் முதல்வர் மீதான நம்பகத்தன்மை தொலைந்துவிட்டது என்றும், அவருடைய தலைமையில் அங்கு நிலைமை மேம்படாது” என்றும் தெரிவித்துள்ளார்.
“மணிப்பூரில் வன்முறை அரங்கேறத்தொடங்கி இன்றுடன் சரியாக 16 மாதங்கள் நிறைவடைகின்றன. தொடர் வன்முறைச் சம்பவங்களால் அங்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து, நிவாரண முகாம்களில் பரிதாபமான நிலையில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நரேந்திர மோடிக்கு மணிப்பூருக்கு செல்லவும், அங்கு அரசியல் கட்சிகளுடனும், பொது சமூகக் குழுக்களுடன், மக்களுடனும் சந்தித்துப் பேச இன்னும் நேரம் கிடைக்கவில்லை” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அமைதித் தூதுவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, உலகம் முழுவதும் செல்லும் பிரதமர், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முயற்சிக்காமல் இருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் காங்கிரஸ் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.