Tuesday, September 24, 2024

பாக். டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது வங்கதேசம்!

by rajtamil
Published: Updated: 0 comment 20 views
A+A-
Reset

பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்களுக்கும், வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கும் எடுத்தன.

வங்கதேசம் 262 ரன்களில் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 12 ரன்கள் முன்னிலை பெற்றது. 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.

21 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. வங்கதேச வீரர் ஹாசன் மஹ்முத்தின் அசத்தலான பந்துவீச்சினால் பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக அகா சல்மான் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச அணித் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹாசன் மஹ்முத் டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

நஹித் ராணா 4 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஸகிர் ஹசன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷண்டோ 38 ரன்களும்,மொமினுல் ஹக் 34 ரன்களும், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 22 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் வங்கதேச அணி 56 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. மேலும், பாகிஸ்தானில் அதன் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.

முதல் இன்னிங்கிஸில் 138 ரன்கள் அடித்த லிட்டன் தாஸூக்கு ஆட்டநாயகன் விருதும், மெஹதி ஹசனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி கடைசியாக 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ராவல்பிண்டியில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக போட்டியில் வெற்றிபெற்று இருந்தது. அதன் பிறகு ஷான் மசூத் பாகிஸ்தான் கேப்டனாக உயர்த்தப்பட்டார். ஆஸ்திரேலியாவிடம் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகியிருந்த நிலையில் மீண்டும் வங்கதேசத்துக்கு எதிராக மீண்டும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024