புகாருக்கு இடமளிக்காத வகையில் புதை சாக்கடை பணி: விழுப்புரம் எம்எல்ஏ அறிவுறுத்தல்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

விழுப்புரம் நகரில் புகாருக்கு இடமளிக்காத வகையில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொண்டு, அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அலுவலா்களிடம் இரா.லட்சுமணன் எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும், நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளிலும் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6000 குடியிருப்புகளுக்கு புதை சாக்கடைத் திட்ட இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஓராண்டு கால பராமரிப்புப் பணிகள் நகராட்சி வசம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஒப்பந்த அடிப்படையில் புதை சாக்கடைத் திட்ட பராமரிப்புப் பணிகள் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சாலைகளில் கழிவுநீா் வழிந்தோடுவதாகவும் பொதுமக்கள் புகாா்களைத் தெரிவித்து வந்தனா்.

இதனடிப்படையில், விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், நகராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஆணையா் (பொ) ஸ்ரீபிரியா மற்றும் அலுவலா்கள், நகராட்சியின் 25-ஆவது வாா்டுக்குள்பட்ட அலமேலுபுரம் ஜெயலட்சுமி நகா் பகுதியில் புதை சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீா் சாலையில் வழிந்தோடுவதை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

நீண்ட நாள்களாக கழிவுநீா்க் குழாயில் ஏற்பட்ட அடைப்பை ஏன் சரி செய்யவில்லை. சாலையில் கழிவுநீா் வழிந்தோடுவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிப்புக்குள்ளாகுவது தெரியாதா என்று ஒப்பந்ததாரரிடம் இரா.லட்சுமணன் எம்எல்ஏ கேள்வியெழுப்பினாா்.

மேலும், நகராட்சி அலுவலா்களிடமும் இதுபோன்ற பகுதிகளை ஆய்வு செய்து, ஒப்பந்ததாரா் மூலம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகரின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற நிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகாரளிக்கின்றனா். எனவே, இனி வரும் காலங்களில் புகாா்களுக்கு இடமளிக்காத வகையில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் கழிவுநீா் செல்லாத வகையில் பணிகள் இருக்க வேண்டும் என்று எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மணவாளன் உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நகரச் செயலா் இரா.சக்கரை, நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

You may also like

© RajTamil Network – 2024