ஊதியம் ரூ.1.32 கோடி, ஓய்வூதியம் ரூ.2.77 கோடியா? காங்கிரஸ் புகார் மீது கூடுதல் தகவல் கொடுத்த ஐசிஐசிஐ?

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

செபி தலைவர் மாதவி புரிக்கு ஐசிஐசிஐ, ஆண்டு சராசரி ஊதியமாக ரூ.1.30 கோடி வழங்கியிருக்கிறது, ஆனால், ஆண்டு ஓய்வூதியப் பலனாக எவ்வாறு அவருக்கு ரூ.2.77 கோடி வழங்கப்பட்டது? ஊதியத்தை விடவும் ஓய்வூதியம் அதிகமாக இருக்குமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

செபி தலைவர் மாதவி புரி புச் 2013 ஆம் ஆண்டு பணி ஓய்வுபெற்ற பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட தொகை அனைத்தும், அவரது பணிக்காலத்துக்கு உரியவை மற்றும் ஓய்வூதியப் பலன்கள்தான் என்று ஐசிஐசிஐ வங்கி விளக்கம் அளித்திருந்தது.

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதவி புச் விதிமுறைகளை மீறி, ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்தும் ஊதியம் பெற்றதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி விளக்கம் கொடுத்திருந்தது.

இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி விளக்கம் கொடுக்க முன்வந்து வெளியிட்ட அறிக்கை, குற்றச்சாட்டை நிராகரிப்பதற்கு பதிலாக, குற்றச்சாட்டுக்கு அதிக ஆதாரங்கள் கொடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக பவன் கேரா குறிப்பிட்டுள்ளார்.

90% பேரால் பதில் சொல்ல முடியாத ஹார்வர்டு பல்கலை.யின் கேள்வி!

அதாவது, ஆண்டு சராசரி ஊதியமும், ஓய்வூதியத் தொகையும் முரண்படுவதாக பவன் கேரா குற்றம்சாட்டியிருக்கிறார். மாதவி புச், 2007 முதல் 2013-14 வரை ஆண்டு சராசரி ஊதியமாக ரூ.1.3 கோடி பெற்றுள்ளார். ஆனால், 2016 – 17 முதல் 2020 – 2021 வரை ஐசிஐசிஐ வழங்கியதாகக் கூறப்படும் ஓய்வூதியத் தொகையில் ஆண்டு சராசரி ஓய்வூதியம் ரூ.2.77 கோடியாக உள்ளது.

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு வழங்கப்படும் ஆண்டு சராசரி ஊதியத்தைவிடவும், ஓய்வூதியப் பலன்கள் அதிகமாக இருக்க முடியுமா? என்று கேட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், மாதவி புச்-க்கு பதிலாக, ஐசிஐசிஐ வங்கி டிடிஎஸ் செலுத்தியிருக்கிறது, இது கொள்கை, அனைத்து ஐசிஐசிஐ ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் பொருந்துமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வருமான வரித்துறை மோசடியும் நடந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஒரு சில குறிப்பிட்ட ஆண்டுகளில் மாதவிக்கு, ஐசிஐசிஐ-யிலிருந்து ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதான் தொழில்நுட்ப ரீதியாக அவர் ஐசிஐசிஐயிலிருந்து விலகியதைக் காட்டுகிறது. ஆனால், அவர் எப்போது செபியின் முழு நேர உறுப்பினராக ஆனாரோ, அப்போது முதல், இந்த உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றும் கேரா குறிப்பிட்டிருக்கிறார். மேலும், நாங்கள் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, அதிலிருந்து செபி வெளியேற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதவி புச், இங்கு உறுப்பினராக இருந்துகொண்டே, விதிமுறைகளை மீறி, ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்தும் மாதாமாதம் ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது.

செபி செபி தலைவர் மாதவி புச் மீது கூறப்படும் குற்றச்சாட்டில், 2017 முதல் இதுவரையில் அவா் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாகவும், இது செபி ஊதியத்துடன் 5 மடங்கு அதிகம் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

ஆனால், ஐசிஐசிஐ வங்கி இதனை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. காங்கிரஸின் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்திருந்த அந்த அறிக்கை, மாதவி புச் ஓய்வுபெற்ற பிறகு, அவரது பணிக்காலத்துக்கான பணப்பலன்கள் மற்றும் ஈஎஸ்ஓபிகளை (பணியாளர் பங்கு உரிமைத் திட்டங்கள்) வழங்கியிருக்கிறது. எனவே, 2017ஆம் ஆண்டு செபியில் சேர்ந்ததில் இருந்தே மாதவி புச் ஐசிஐசிஐயிலிருந்து ஊதியம் பெற்றதாகவும், அது மொத்த வருமானம் ரூ.16.8 கோடியைப் பெற்றதாக காங்கிரஸ் கூறியிருப்பதில் உண்மையில்லை என்று ஐசிஐசிஐ விளக்கம் அளித்திருந்தது.

அதுபோல, அவர் வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்றபிறகு, ஓய்வூதியப் பலன்களைத் தவிர, ஊதியமோ அல்லது வேறு எந்த பணப்பலன்களையும் ஐசிஐசிஐ வங்கியோ அல்லது அதன் வேறு எந்த குழுமமோ அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

முதன்முறை! கண் பார்வையை மேம்படுத்தும் சொட்டு மருந்து இந்தியாவில் அறிமுகம்!!

இஎஸ்ஓபி என்றால் என்ன?

இஎஸ்ஓபி எனப்படும் பணியாளர் பங்கு உரிமைத் திட்டம் என்பது, பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் பெற்றிருக்கும் உரிமை மீது பணப்பலனை பெற அனுமதிக்கும் ஒரு திட்டமாகும், பொதுவாக அந்த நிறுவனத்தின் பங்குகள் மூலம் இது வழங்கப்படும். இந்த ஏற்பாடு ஓய்வூதிய பணப்பலனாகவே வழங்கப்படும், அதாவது, ஊழியர்கள் நிறுவனத்திற்கோ அல்லது சந்தையிலோ தங்களது பங்குகள் விற்றுவிட்டு வெளியேறலாம், அப்போது அவர்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை நிறுவனம் வழங்கலாம் என்பதாகும்.

குற்றச்சாட்டை எழுப்பிய ஹண்டன்பர்க்

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதவி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் அண்மையில் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மாதவி புச் மறுப்பு தெரிவித்தாா்.

செபி தலைவராக மாதவி புச் பதவியேற்கும் முன், ஐசிஐசிஐ வங்கியில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளாா்.

தில்லியில் காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா எழுப்பிய குற்றச்சாட்டில், கடந்த 2017-ஆம் ஆண்டு செபியின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்ட மாதவி புச், 2022-ஆம் ஆண்டு செபி தலைவராகப் பதவியேற்றாா்.

2017-ஆம் ஆண்டு செபியில் மாதவி புச் சோ்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிலும் அவா் பதவியில் உள்ளாா். அதற்கான ஊதியத்தை இதுநாள் வரை அந்த வங்கியிடம் இருந்து அவா் பெற்று வருகிறாா்.

கடந்த 2017 முதல் இதுநாள் வரை, ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து அவா் ரூ.16.8 கோடி ஊதியமாக பெற்றுள்ளாா். அதாவது செபியிடம் இருந்து அவா் பெற்ற ரூ.3.3 கோடி ஊதியத்துடன் ஒப்பிடுகையில் வங்கியிலிருந்து வந்த ஊதியம் 5.09 மடங்கு அதிகமாகும் என்று கூறியிருந்தார். ஆனால் அது ஊதியமல்ல, ஓய்வூதியப் பலன்கள் என்று ஐசிஐசிஐ வங்கி விளக்கம் கொடுத்திருந்தது.

You may also like

© RajTamil Network – 2024