Tuesday, September 24, 2024

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் புகைப்பிடித்த பயணி – காவல் துறையிடம் ஒப்படைப்பு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் புகைப்பிடித்த பயணி – காவல் துறையிடம் ஒப்படைப்பு

சென்னை: குவைத்தில் இருந்து இன்று சென்னை வந்த விமானத்தில் புகைப்பிடித்த பயணி, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குவைத்தில் இருந்து 178 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பயணி பாரூக் (42) அடிக்கடி தனது இருக்கையில் இருந்து எழுந்து கழிபறைக்குச் சென்று புகைப்பிடித்து விட்டு வந்தார். இதுபற்றி சக பயணிகள் விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாரூக்கிடம் விசாரித்த பணிப் பெண்கள், தலைமை விமானியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

அவர், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சென்னையில் விமானம் தரையிறங்கிய போது தயார் நிலையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் சென்று பாரூக்கை பிடித்து, சுங்க சோதனை மற்றும் குடியுரிமை சோதனைகளை முடித்துவிட்டு, விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், விமான நிலைய காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தான் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், மன்னித்து விடுமாறும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிய போலீசார், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

You may also like

© RajTamil Network – 2024