கொல்கத்தாவில் ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஓர் அறையில் கடந்த மாதம் 9-ஆம் தேதி, 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதிகோரி மருத்துவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளநிலை மருத்துவர்களின் போராட்டம் தொடருகிறது.
மருத்துவர்களின் போராட்டம் 3 வாரங்களைக் கடந்தும் தொடருவதால், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இளநிலை மருத்துவர்களின் போராட்டம் தொடருகிறது. இதையடுத்து, அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பலர், மருத்துவ கிகிச்சை பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில், ஆர். ஜி. கர் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பலர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் கூறியதாவது, ”குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு, உயிரிழந்த எங்களுடைய சகோதரிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் பலர் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். உண்மை என்ன என்பது தெரிந்தாக வேண்டும்” என்று கூறியுள்ளனர்.