மகாராஷ்டிர மாநிலத்தில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் உயிரிழந்த இரண்டு மகன்களின் உடல்களையும், பெற்றோர் தோளில் சுமந்துசென்ற விடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில், அஹேரி தாலுகாவைச் சேர்ந்த இளம் தம்பதி, தங்களது இரண்டு மகன்களின் உடல்களை தோளில் சுமந்து சென்ற காட்சி வெளியாகியிருக்கிறது.
தங்களது கிராமத்திலிருந்து 15 கி. மீ. தொலைவில் மருத்துவமனை இருந்ததால், உரிய நேரத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற முடியாமல், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து விட்ட நிலையில், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு குழந்தைகளின் உடலை எடுத்து வர ஆம்புலன்ஸ் இல்லாததால், பெற்றோரே தங்களது குழந்தைகளின் உடலை சுமந்து வந்துள்ளனர்.
சாலையற்ற பாதைகளில், ஒரு தம்பதி, 10 வயதுக்கு உள்பட்ட தங்களது இரண்டு குழந்தைகளின் உடலையும் சுமந்தபடி வரும் விடியோவை, மகாராஷ்டிர பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வாடேடிவார் பகிர்ந்துள்ளார்.
இரு குழந்தைகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவர்கள் உரிய நேரத்தில் வராததால் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, விதர்பாவில், ஆம்புலன்ஸ் வராததால், கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.