மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் யார் என்பதை மக்கள் தேர்வு செய்வார்கள் என சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் இன்று (செப். 5) தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகா விகாஸ் அகாதி கூட்டணியில் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்தியா கூட்டணி சார்பில் மகாராஷ்டிர முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கோரிய சிவசேனை மூத்த தலைவர் உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஏற்க மறுப்பு தெரிவித்தது.
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தில்லி சென்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசியதும் பலனளிக்கவில்லை. கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்துப் பேசிய சஞ்சய் ரெளத் பேசியதாவது,
''முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். தங்கள் மனதில் உள்ளவர்களை அவர்கள் தேர்வு செய்வார்கள். யார் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால், மகா விகாஸ் அகாதி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். ஊழல் மிகுந்த அரசை வெளியேற்றுவதே எங்கள் முதல் இலக்கு. அதன் பிறகு முதல்வர் யார் என்பதை ஆலோசித்து முடிவெடுப்போம்'' எனக் குறிப்பிட்டார்.