“2026 தேர்தலில் அதிமுக உடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி” – நயினார் நாகேந்திரன்

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

“2026 தேர்தலில் அதிமுக உடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி” – நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: “தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி,” என்று பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் வ.உ.சி. மணிமண்டபத்திலுள்ள வஉசி சிலைக்கு இன்று (செப்.5) மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணியினர் போர்க்கொடி தூக்குகிறார்கள். ஆனால், தமிழகத்தில் பெண் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் முதல்வருக்கு, இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை. பள்ளி கல்லூரி வாசல்களில் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.

தமிழக பாஜகவை வழிநடத்தும் குழுவில் உங்களுடைய பெயர் இடம் பெறவில்லையே என்ற கேள்விக்கு, “கட்சி தலைமை முடிவு செய்து ஒரு குழுவை அமைத்திருக்கிறது. தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார்” என்றார்.

நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காத நிலையில் விஜய்யை கண்டு திமுக பயப்படுகிறதா என்ற கேள்விக்கு, “யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி அனுமதி கொடுத்துவிட்டால், இதுபோன்ற பிரச்சினைகள் வராது. இப்போது அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம் விஜய்யை கண்டு திமுக அஞ்சுகிறது என்று தோன்றுகிறது,” என்றார்.

விஜயதரணி தனக்கு பதவி வழங்கப்படவில்லை என கூறியிருக்கிறாரே என்ற கேட்டபோது, “விஜயதரணிக்கு பதவி கொடுத்திருக்க வேண்டும். அதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம் .வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். அதிமுகவில் பல உயர்ந்த பதவிகளில் இருந்துவிட்டு பாஜகவுக்கு வந்தேன். மாநில துணைத் தலைவர் பதவி கொடுத்தார்கள். தற்போது சட்டப்பேரவை குழு தலைவராக மட்டும் தான் இருக்கிறேன். 40 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருந்தாலும் குழு தலைவர்தான். 4 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருந்தாலும் குழு தலைவர்தான்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “திமுக ஆட்சியில் விளம்பரத்துக்கு அதிக செலவு செய்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் திட்டங்களைவிட விளம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகையை 2 ஆண்டுகள் கழித்து மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு வழங்கியிருக்கிறார்கள்” என்றார். 2026 தேர்தலில் அதிமுகவுடன் பாஜகவுக்கு இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, “அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான்” என்று அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024