தெலங்கானாவில் அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 29 பேர் பலியானதாக மாநில தலைமைச் செயலர் சாந்தி குமாரி இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநில தலைமைச் செயலர் சாந்தி குமாரி கூறியதாவது, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை பதிவான மழையின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 29 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தலா மூன்று கோடி ரூபாய் விடுவிக்கப்படுகிறது என்றார்.
சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்கு
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த விரிவான அறிக்கையை திங்கள்கிழமை பிற்பகலுக்கு முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும், பலியான 29 பேரின் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தெலங்கானாவில் அண்மையில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு ரூ.5,438 கோடி என மாநில அரசு முதற்கட்ட மதிப்பீட்டின்படி தெரிவித்துள்ளது.