Tuesday, September 24, 2024

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நேற்று (செப்.6) மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (செப்.7) காலை 8.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.

மேலும் இது வடக்கு திசையில் நகர்ந்து 8ம் தேதி வாக்கில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இந்த காற்றழுத்ததாழ்வு மண்டலமானது, அடுத்த 3 தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம்-வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்றும்(செப்.7), நாளையும் (செப்.8) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்.9ம் தேதி முதல் செப்.13ம் தேதி வரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று முதல் செப்.11-ம் தேதி வரை, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதேபோல், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இன்று (செப்.7) முதல் செப்.11ம் தேதி வரையில்,சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024