Friday, September 20, 2024

3-வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்களில் ஆல் அவுட்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆலி போப் 154 ரன்கள் குவித்தார்.

லண்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேனியல் லாரன்ஸ் மற்றும் பென் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் லாரன்ஸ் 5 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் ஆலி போப் களம் புகுந்தார். போப் – டக்கட் இணை அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. இதில் டக்கட் 86 ரன்னிலும், அடுத்து களம் புகுந்த ஜோ ரூட் 13 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஆலி போப் சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் அடித்திருந்தது. ஆலி போப் 103 ரன்களுடனும், ஹாரி புரூக் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 19 ரன்களிலும், ஜாமி சுமித் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆலி போப் 154 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக மிலன் ரத்னாயகே 3 விக்கெட்டுகளும், விஷ்வா பெர்னண்டோ, லஹிரு குமரா மற்றும் டி சில்வா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இலங்கை தனது முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024