Monday, September 23, 2024

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் விவகாரம்; இந்திய நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் விவகாரம்; இந்திய நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

சென்னை; இலங்கை கடற்படையின் தொடரும் அத்துமீறல் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:பாமக தலைவர் அன்புமணி: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்த பிறகு வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது. இவ்விவகாரத்தில், மத்திய அரசு அமைதியாக இருப்பதால் தொடர்ந்து அத்துமீறல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு கொண்டிருக்கிறது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதும், அபராதம் விதிப்பதும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இனியும் அலட்சியம் காட்டாமல் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் என தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலை, மத்திய அரசு வாய்மூடி மவுனமாக வேடிக்கை பார்த்து வருவதும், தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை அண்டை நாடு தொடர்ந்து பறித்து வருவதும் நாட்டின் இறையாண்மைக்கு இழைக்கப்படும் அநீதி. இனியாவது இதை மத்திய அரசு உணர்ந்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இலங்கை கடற்படையினரின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024