ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, டிராக்டரில் சென்று அந்த மாநிலத்தின் முதல்வர் நயாப் சிங் சைனி தாக்கல் செய்தார்.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் செப். 12-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
ஹரியாணாவில் மோடி பிரசாரம்
லத்வா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நயாப் சைனி, பாஜக தொண்டர்களுடன் டிராக்டரில் பேரணியாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது, செய்தியாளர்களுடன் நயாப் சைனி பேசியதாவது:
“லத்வா மக்களின் அன்பு மற்றும் ஆசிர்வாதத்தால் நனைந்தேன். தேர்தல் முடிவுகள் வந்தவுடன், 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஹரியாணாவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லவுள்ளோம். பூபிந்தர் சிங் ஹூடாவிடம் எவ்வித கொள்கையோ, நோக்கமோ இல்லை.
மக்கள் இணைந்து பாஜக ஆட்சியை மூன்றாவது முறையாக அமைப்பார்கள். ஹரியாணாவுக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி, செப். 14-ஆம் தேதி வருகை தரவுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதல் எதிரொலி: மணிப்பூரில் ஊரடங்கு அமல்!
இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல்
பாஜகவின் இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டர் தெரிவித்தார்.
மேலும், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று நம்புவதாகவும், காங்கிரஸ் தோல்வியை நோக்கிச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.