உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்: சிவகாசி மாநகர திமுக தீர்மானம்
சிவகாசி: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சிவகாசி மாநகர திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சிவகாசி மாநகர திமுக சார்பில் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 48 வார்டு மற்றும் 6 பகுதி கழகம் வாரியாக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருத்தங்கல்லில் நடைபெற்றது. அவைத் தலைவர் மணிக்கம் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் முன்னிலை வகித்தார். சிவகாசி மேயர் சங்கீதா, திமுக வர்த்தக அணி மாநில துணை தலைவர் வனராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில், அமெரிக்க பயணத்தின் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய முதல்வருக்கும், சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுற்றுச் சாலை பணிக்கு நிதி ஒதுக்கிய முதல்வர் மற்றும் நிதி அமைச்சருக்கும், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தெற்காசியாவில் முதல் முறையாக இரவு நேர 'ஃபார்முலா 4 ' கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், பால்ராஜ், பகுதிச் செயலாளர்கள் ஞானசேகரன், காளிராஜ், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.