மக்களவைத் தேர்தலில் சந்தித்த தொடர் தோல்விகளால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விரக்தியில் இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்தும், மத்திய அரசு குறித்து விமர்சித்ததற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் 240 இடங்களைக்கூட பாஜக நெருங்கி இருக்காது: ராகுல்
சிவராஜ் சிங் செளகான் விமர்சனம்
ராகுல் காந்தியின் பேச்சை விமர்சித்து சிவராஜ் சிங் செளகான் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
"எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் ராகுல் காந்தி உள்ளார். அந்த பதவிக்கான பொறுப்புகள் உள்ளன. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜபேயி, பல சூழல்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் என்பதை ராகுல் காந்திக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
மூன்றாவது முறையாக தோல்வியடைந்ததால், பாஜக மற்றும் மோடி மீதான எதிர்ப்பு மனதில் பதிந்து, நாட்டை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்.
நம் நாட்டுக்குள் பல்வேறு பிரச்னைகளில் சண்டையிட்டுக் கொள்ளலாம், ஆனால், நாட்டுக்கு வெளியே பாரதம் மட்டுமே.” எனத் தெரிவித்தார்.