தொழில் திட்டங்களுக்கு ரூ.100 கோடி வரை அடமானம் இல்லாமல் நிதி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப். 11) தெரிவித்தார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில்துறையினருடன் சந்திப்பு இன்று (செப். 11) மாலை நடைபெற்றது.
முன்னதாக கோவையில் இன்று காலை ஜி.எஸ்.டி., வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு, துணி, தோல் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் தொழில்துறை பிரதிநிதிகளின் கோரிக்கைகள், தொகுக்கப்பட்டு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, ரூ. 100 கோடி வரை தொழில் திட்டங்களுக்கு அடமானம் இல்லாமல் சுயநிதி தர முடிவு செய்யப்படுள்ளதாகக் கூறினார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கிரெடிட் உத்தரவாத நிதி உருவாக்கம் என கோவைக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
30 குறு நிறுவனங்களுக்கு ரூ. 103 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (எஸ்.ஐ.டி.பி.ஐ.) கோவை கிளையில் 2024ஆம் ஆண்டில் ரூ.491 கோடி அனுமதிக்கப்பட்டு ரூ. 314 கோடி தரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஜி.எஸ்.டி. குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜி.எஸ்.டி.யில் மாறுதல்கள் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.