தில்லி கலால் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 155 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், அவரால் முதல்வர் அலுவலகத்துக்குள் நுழைய முடியாது.
அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர் "நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சுதந்திரத்தைப் பறிக்கும் அநியாயமான செயல்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டு, பிணை வழங்கி உத்தரவிட்டது.
தில்லி கலால் முறைகேடு வழக்கில் ஆறு மாதங்களாக அரவிந்த் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டநிலையில், தற்போது சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததால் அவர் வெளியே வரவிருக்கிறார்.
செமிகண்டக்டர் இறக்குமதி ஏன்? நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்ட இளைஞர் எங்கே?
உச்ச நீதிமன்றம், அவருக்கு அளித்திருக்கும் நிபந்தனை ஜாமீனில், முதல்வர் அலுவலகம் செல்லவோ, கோப்புகளில் கையெழுத்திடவோ கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10 லட்சம் பிணைப் பத்திரம், தில்லி கலால் கொள்கை குறித்து பொதுவெளியில் கருத்துத்தெரிவிக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு, வாரத்தில் இரண்டு நாள்கள் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அவரால் முதல்வர் பணிகளைத் தொடர முடியாது என்று தெரிய வந்துள்ளது.