அதானி குழுமத்தின் பணமோசடி மற்றும் பத்திரங்கள் விசாரணையுடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளில் 310 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளதாக, அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அதானி குழுமத்தின் பணமோசடி மற்றும் பத்திரங்கள் விசாரணையுடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளில் 310 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளதாக சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் கூறியுள்ளதாக, சுவிஸ் உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றில் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், சுவிஸ் உள்ளூர் அறிக்கையை மேற்கோள்காட்டிய ஹிண்டன்பர்க் ரிசர்ச், தனது எக்ஸ் பக்கத்தில் “2021 ஆம் ஆண்டிலேயே அதானி மீதான பணமோசடி மற்றும் பத்திரங்கள் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, பல சுவிஸ் வங்கிக் கணக்குகளில் 310 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
மேலும், அதானி குழுமத்தின் தவறுகளை ஹிண்டன்பர்க் கூறுவதற்கு முன்பாகவே, அதனை ஜெனீவா அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரித்து வருவதாக, சுவிஸ் உள்ளூர் ஊடகத்தில் தெரிவிக்கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது “அதானி நிறுவனத்தின் மீது எந்தவொரு சுவிஸ் நீதிமன்றமும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை; எங்கள் நிறுவனத்தின் கணக்குகள் எதுவும் எந்த அதிகாரத்தினாலும் பறிமுதலும் செய்யப்படவில்லை.
முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம். மேலும், சுவிஸ் நீதிமன்றம் கூறும் உத்தரவில் கூட, எங்கள் குழும நிறுவனங்களைக் குறிப்பிடவில்லை.
அதுமட்டுமின்றி, அத்தகைய அதிகாரம் அல்லது ஒழுங்குமுறை அமைப்பிலிருந்து விளக்கமோ அல்லது தகவல்களுக்கான எந்த கோரிக்கைகளையோ நாங்கள் பெறவில்லை. ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமானவை, பகுத்தறிவற்றவை, அபத்தமானவை.
இது எங்கள் குழுவின் நற்பெயரைக் கெடுக்கவும், சந்தை மதிப்பில் மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தவும் மற்றவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுத்தும் மற்றொரு திட்டமிடப்பட்ட மிகப்பெரிய முயற்சி என்று கூறுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.