Table of Contents
தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று(செப்.13) வெளியே வந்தார்.
திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கேஜரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் கொட்டும் மழையும் பொருள்படுத்தாமல் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதையும் படிக்க: சிறையில் இருந்து வெளியே வந்தார் கேஜரிவால்! கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு!
காரின் சன்-ரூப்பின் வெளியே வந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த கேஜரிவால் அவர்களிடம் பேசிய போது அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’…‘வந்தே மாதரம்’ எனக் கோஷமிட்டனர்.
அரவிந்த் கேஜரிவால் ஆதரவாளர்களிடம் பேசியதாவது:
நான் வெளியே வருவதற்கு பிரார்த்தனை செய்ததற்கும், கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் என்னை வரவேற்க வந்ததற்கும் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் நமது நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இது ஜனநாயகத்தின் வெற்றி: கேஜரிவாலின் ஜாமீன் குறித்து பஞ்சாப் முதல்வர்
நான் எனது வாழ்நாள் முழுவதும் பல இன்னல்களைச் சந்தித்துள்ளேன். ஆனாலும், கடவுள் என் பக்கம் இருக்கிறார். என்னைச் சிறையில் அடைத்து அடக்க நினைத்தனர். ஆனால், சிறையில் அடைத்தாலும் நான் மேலும் வலிமை பெறுவேன். நான் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்” என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறைக்கு வெளியே அரவிந்த் கேஜரிவாலுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.