மணிப்பூருக்கு செல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மட்டுமே பிரதமர் மோடி திட்டம் மேற்கொள்கிறார் என்று காங்கிரஸ் செயலர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வரும் நிலையில், வன்முறை தொடர்பான விசாரணைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க, விசாரணை ஆணையத்திற்கு நவம்பர் 20 ஆம் தேதி வரை மத்திய அரசு வெள்ளிக்கிழமையில் அவகாசம் வழங்கியது. இந்த நிலையில், பிரதமர் மோடி இதுவரையில் மணிப்பூர் செல்லாமல் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் பக்கத்தில் “மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை மற்றும் கலவரங்களின் காரணங்களை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையம், கடந்தாண்டு ஜூன் 3 ஆம் தேதியில் அமைக்கப்பட்டது.
அதன் அறிக்கையை சமர்ப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. இருப்பினும், அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையத்திற்கு நவம்பர் 24 ஆம் தேதி வரை மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதுவாயினும், மணிப்பூர் மக்களின் வேதனையும் தடையின்றி தொடர்கிறது.
நாட்டின் பிற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் தொடர்ந்து பயணம் செய்ய, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
ஆனால், மிகவும் சிக்கலான மாநிலத்திற்கு வருகை தருவதை மட்டும் தவிர்த்து வருகிறார்’’ என்று கூறியுள்ளார்.
மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதத்தில், இரு பிரிவினருக்கு இடையே தொடங்கிய வன்முறை, இன்று வரையில் முடிவில்லாத பிரச்னையாக இருந்து வருகிறது; இதுவரையில், இந்த வன்முறையில் 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செபி தலைவர் சீன நிறுவனங்களில் முதலீடு செய்வது பிரதமருக்குத் தெரியுமா?
இந்த வன்முறை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையிலான ஆணையம் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஹிமான்ஷு சேகர் தாஸ், அலோகா பிரபாகர் ஆகியோரைக் கொண்ட குழுவிற்கு கலவரங்களின் காரணங்களைக் கண்டறிய உத்தரவிடப்பட்டது.