குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான தமிழர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
குவைத்தின் தெற்குபகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இரண்டு தமிழர்களும் பலியாகியுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மேலும் ஒரு தமிழர் பலியாகியிருக்கும் தகவல் கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு, குவைத் தீ விபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்து இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், குவைத் தீ விபத்தில் பலியனவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையே, குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் கிடைத்து இருப்பதாகவும் எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.