புதுடெல்லி,
குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இத்தாலி செல்வதற்கு முன்பாக பிரதமர் மோடி குவைத் தீ விபத்து தொடர்பாக அவசர அவசரமாக மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரனம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை தாயகம் கொண்டுவர குவைத் விரைகிறது இந்திய விமானப்படை விமானம். அனைவரின் உடலையும் ஒரே விமானத்தில் கொண்டு வரும் விதமாக மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.