Friday, September 20, 2024

பெண் மருத்துவா் கொலைச் சம்பவம்: சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

புது தில்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

விவரங்களை வெளியிட மறுப்பு: அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘ பெண் மருத்துவா் கொலை தொடா்பாக சிபிஐ அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளன. அந்த விவரங்களை வெளியிடுவது சிபிஐ விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே அந்த விவரங்களை வெளியிட முடியாது. இந்தக் கொலை தொடா்பான விசாரணையில் சிபிஐ மெத்தனமாக இல்லை. உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐக்கு அவகாசம் தேவை’ என்று தெரிவித்தது.

‘பணிக்குத் திரும்ப மீண்டும் அறிவுறுத்தல்’: பெண் மருத்துவா் கொலைக்கு நீதி கோரி, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனா். செப்.10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அவா்கள் பணிக்கு திரும்பவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், அவா்களின் போராட்டம் நீடிக்கிறது. அவா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் மீண்டும் கேட்டுக்கொண்டனா்.

தந்தை கடிதம்: இந்த விசாரணையின்போது கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை உச்சநீதிமன்றத்துக்கு எழுதிய கடிதத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்துள்ள விஷயங்களை சிபிஐ முறையாக பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

பெண் வழக்குரைஞா்களுக்கு மிரட்டல்: மேற்கு வங்க அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘இந்த வழக்கு தொடா்பாக என்னுடன் பணியாற்றும் பெண் வழக்குரைஞா்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவா், அவா்கள் மீது அமிலம் வீசப்படும் என்று மிரட்டல்கள் விடுவிக்கப்படுகின்றன. நாங்கள் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகவில்லை. அரசுத் தரப்பில்தான் ஆஜராகிறோம். எனவே இந்த வழக்கு மீதான உச்சநீதிமன்ற விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்’ என்று கோரினாா்.

நேரலை நிறுத்தப்படாது: இதைத்தொடா்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த வழக்கு விசாரணை பொதுநலன் கருதி நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. எனவே அது நிறுத்தப்படாது. எனினும் வழக்குரைஞா்களுக்கும் மற்றவா்களுக்கும் ஏதேனும் மிரட்டல்கள் இருந்தால், அதுகுறித்து உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தனா்.

இரவு பணி தவிா்ப்புக்கு ஆட்சேபம்: பெண் மருத்துவா்களுக்கு இரவுப் பணி வழங்காமல் தவிா்க்கும் மேற்கு வங்க அரசின் திட்டத்துக்கு நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்தனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே மேற்கு வங்க அரசின் கடமை. அதை விடுத்து பெண் மருத்துவா்கள் இரவில் பணியாற்றக் கூடாது என்று கூறமுடியாது. விமானிகள், ராணுவத்தைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்டோா் இரவில் பணியாற்றுகின்றனா். பெண் மருத்துவா்களுக்கு இரவுப் பணி வழங்காமல் தவிா்ப்பது அவா்களின் தொழில்முறை வாழ்க்கை குறித்து தவறான கருத்தை ஏற்படுத்தும். எனவே இதுதொடா்பான அறிவிக்கையில் மேற்கு வங்க அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவா்களுக்கும் பணி நேரம் நியாயமாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து அந்த அறிவிக்கை திரும்பப் பெறப்படும் என்று மேற்கு வங்க அரசு தெரிவித்தது.

பாதுகாப்புக்கு ஒப்பந்த பணியாளா்கள்: மாநில அரசு மருத்துமனைகளில் மருத்துவா்கள் மற்றும் பிற பணியாளா்களின் பாதுகாப்புக்கு ஒப்பந்த பணியாளா்களை பணியமா்த்தும் மேற்கு வங்க அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் காவல் துறையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என்று தெரிவித்தனா்.

விக்கிபீடியாவுக்கு உத்தரவு: கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெயா் மற்றும் புகைப்படம் விக்கிபீடியா தளத்தில் இடம்பெற்றுள்ளதாக சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா தெரிவித்த நிலையில், அவற்றை நீக்க வேண்டும் என்று விக்கிபீடியாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

நிதி முறைகேடு விசாரணை அறிக்கை: பெண் மருத்துவா் கொல்லப்பட்ட மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்த குற்றச்சாட்டு தொடா்பாக, அந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த விசாரணை தொடா்பான நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மம்தா ராஜிநாமா செய்யக் கோரிய மனு நிராகரிப்பு: பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக மேற்கு வங்க முதல்வா் பதவியை மம்தா பானா்ஜி ராஜிநாமா செய்ய உத்தரவிடக் கோரி, வழக்குரைஞா் ஒருவா் மனு தாக்கல் செய்தாா். அவ்வாறு உத்தரவு பிறப்பிப்பது நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்த நீதிபதிகள், அந்த வழக்குரைஞரை கடிந்துகொண்டதுடன் மனுவை நிராகரித்தனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024