மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ. 11 லட்சம் வெகுமதி வழங்குவேன் என்று தெரிவித்த சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய புல்தானா சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட், அமெரிக்காவில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து கூறியதற்காக ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு நான் ரூ.11 லட்சம் வெகுமதியை வழங்குவேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிவசேனை எம்எல்ஏவுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் வெகுமதி: சிவசேனை எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
அடுத்த சர்ச்சை
அதே நாளில் செய்தியாளர்களிடம் பேசிய கெய்க்வாட், சிவசேனை தலைவரும், முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, தனது மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது, எனது நிகழ்வில் எதாவது காங்கிரஸ் நாய் நுழைய முயன்றால் அங்கேயே புதைத்துவிடுவேன் என்று அவர் பேசும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும், ”நான்தான் கருத்து தெரிவித்தேன், நானே மன்னிப்பு கேட்காத போது, முதல்வர் ஏன் அதனை செய்ய வேண்டும். நாட்டில் 50 சதவிகிதம் மக்கள் இடஒதுக்கீட்டை பெற்று வரும் நிலையில், அதனை நீக்கக் கோரிய ராகுல் காந்திக்கு எதிரான கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வழக்குப் பதிவு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான கருத்து தெரிவித்த கெய்க்வாட் மீது காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கெய்க்வாட் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே, அவரின் காரை ஒரு போலீஸ் கழுவும் காட்சிகள் இணையத்தில் பரவி வைரலானது.
அதேபோல், புலியை வேட்டையாடி, அதன் பற்களை செயினாக கோர்த்து அணிந்திருந்த குற்றத்துக்காக கெய்க்வாட் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.