லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில், நடிகர் நாகர்ஜுனாவை வைத்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. படப்பிடிப்பு காட்சிகளை செல்போனில் விடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, சற்று முன், லோகேஷ் கனகராஜ் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ஒரேயொரு விடியோ பதிவு மூலம் ஏராளமான மக்களின் கடந்த இரு மாத கால கடின உழைப்பு வீணாகிவிட்டது.
இவ்வாறு படக்காட்சிகள் வெளியிடப்பட்டால், ஒட்டுமொத்த படத்தின் சுவாரசியத்தையும் கெடுத்து விடும். ஆகவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென ஒவ்வொருவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! எனப் பதிவிட்டுள்ளார்.