‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது.
சுதந்திரத்துக்கு பின், இந்திய வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், பாரதம் மாற்றத்தக்க வகையிலான சீர்திருத்தங்களைக் கண்டு வருகிறது.
இன்று, இதே திசையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை குறித்து அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம், மைல்கல் சாதனையாகக் குறிப்பிடும்படியான தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கி பாரதம் ஓர் அசுரத்தனமான நகர்வை எடுத்துச் செல்கிறது.
நேர்மையான விதத்திலும், நிதிச்சிக்கனத்துடன் தேர்தல்களை நடத்திடுவதன் மூலமும், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்திடுவதன் மூலமும், நம் ஜனநாயகத்துக்கு வலுவூட்ட வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மோடி அவர்களின் மனஉறுதியை ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரதிபலிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார் அமித் ஷா.