வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் ஆனது போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி, வங்கிக் கணக்கை ஹேக் செய்யும் மோசடி அதிகரித்து வருகின்றது.
இந்த மோசடியில் சிக்காமல் இருக்க தேவையற்ற குறுஞ்செய்திகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் பிரிவுக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிப்பதற்கு ஏற்ப சைபர் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே இருப்பதை மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களும், பல்வேறு ஆய்வுத் தகவல்களும் உறுதிப்படுத்துகின்றன.
ராஜஸ்தானில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!
நாடு முழுவதும் 113 கோடிக்கும் அதிகமான கைப்பேசிகளை மக்கள் பயன்படுத்தும் நிலையில், மொத்த மக்கள்தொகையில் பாதிப்பேர் இணையத்தை அன்றாடும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்கேற்ப சைபர் குற்றவாளிகளும் நாளுக்குநாள் பரிணாமம் அடைந்து, புதுவிதமான மோசடிகளை கையாளத் தொடங்கியுள்ளனர். மோசடி அழைப்புகளாலும், குறுஞ்செய்திகள் மூலமும் நாள்தோறும் பல கோடி பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
குறுஞ்செய்தி மூலம் மோசடி
தற்போது, செல்போன் எண்ணுக்கு வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் ஆனது போன்று குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அதிலிருக்கும் லிங்க்கை தெரியாமல் கிளிக் செய்தால் போதும், செல்போன் முழுவதுமாக ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் பறிபோகும் நிலை ஏற்படும்.
மேலும், அந்த லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம், நமக்கே தெரியாமல் நமது செல்போனில் மறைமுகமாக செயலி பதிவிறக்கப்படும். அதன்மூலம், நமது செல்போனில் உள்ள அனைத்து தகவலையும் மோசடி செய்பவரால் பார்க்க முடியும்.
கூகுள் பே மோசடி
அதேபோல், கூகுள் பே கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குக்கு அடையாளம் தெரியாத நபர்களால் குறிப்பிட்ட தொகை அனுப்பப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த எண்ணில் இருந்து அழைக்கப்பட்டு, தெரியாமல் பணம் அனுப்பியதாகவும், மீண்டும் அதே எண்ணுக்கு பணத்தை அனுப்புமாறும் கோரிக்கை வைக்கப்படுகிறது.
அந்த நபரின் கோரிக்கையை ஏற்று, அவரின் கூகுள் பே கணக்கை கிளிக் செய்தால், சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் கொள்ளையடிக்கப்படுகிறது.
அவ்வாறு கூகுள் பேவில் பணம் அனுப்பியதாக யாராவது அழைத்தால், அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு அடையாள அட்டையும் வந்து பணமாக பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துமாறு தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் சைபர் மோசடிக்கு உள்ளானால், தாமதிக்காமல் உடனடியாக தமிழ்நாடு சைபர் பிரிவின் உதவி எண்ணான 1930-ஐ அழைக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.