ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்றும் பாஜக அரசால் இதனை செயல்படுத்த முடியாது என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று(செப். 18) ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு பாஜக அல்லாத மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைச் சாத்தியமில்லாதது. இந்தியாவின் பல வேறுபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களை புறக்கணிப்பதுடன் கூட்டாட்சித் தத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதாகும்.
தேர்தல் பணிகள், பிராந்திய பிரச்சினைகள் மற்றும் நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றில் உள்ள பரந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டால் இது முற்றிலும் சாத்தியமற்றது.
இது ஆட்சியின் இயல்பான போக்கை சீர்குலைக்கும், அனைத்து அலுவலக விதிமுறைகளிலும் சீரமைப்பு தேவைப்படும்.
இந்த முன்மொழிவு என்பது பாஜகவின் அகங்காரத்தை திருப்திபடுத்தும் ஒரு நடவடிக்கைதான். ஆனால், அவர்களால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது. ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப, இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது.
இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களில் ஆற்றலை வீணாக்காமல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களை சமமாக விநியோகித்தல் போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒரே நாடு, ஒரே தேர்தல்
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, தனது அறிக்கையை கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் சமர்பித்தது.
18,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், மக்களவை மற்றும் பேரவைகளுக்கு ஒரே நேரத்திலும், அடுத்த 100 நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் என இரு கட்டங்களாக தோ்தலை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் குழு அளித்த பரிந்துரைகள், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மன்றங்களில் விவாதிக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக இக்குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்ல செயலாக்கக்குழு அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும், வருகின்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.