வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே மிகவும் பிடிக்கும்: ரிஷப் பந்த்
முதல் டெஸ்ட்டில் வெற்றி
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணியில் மாற்றமில்லை
இந்திய அணி வீரர்களின் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உள்பட சில வீரர்களுக்கு வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர் சாதனை!
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்திய ஆடவர் அணியின் தேர்வுக் குழு வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், முதல் டெஸ்ட்டில் விளையாடிய அதே இந்திய அணியே தொடரும் என தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யஷ் தயாள்.
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.