படம் பிடிக்கவில்லை என்றால் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறினார்.
சென்னை,
நடிகர் விதார்த் தற்போது 'லாந்தர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சாஜி சலீம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எம் சினிமா புரொடக்சன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு எம்.எஸ். பிரவீன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது அதில் கலந்தி கொண்ட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் திரையரங்கில் படம் பார்ப்பவர்களுக்கு வேண்டுகோள் வைத்தார். அது குறித்து அவர் பேசியதாவது,
'120 ரூபாய் வைத்து கோபுரம் கட்டப்போவது இல்லை. படம் பிடித்தது என்றால் 4 பேருக்கு சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். படத்துக்கு போகிறவர்களிடம் "அந்த படத்திற்கு போகாதீங்க .. நல்லாவே இல்லை" என்று சொல்லாதீர்கள். ஒரு படத்தை எடுப்பதற்கு எத்தனைப் பேர் உழைக்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள் என்பதை தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு கூறினார்.
இப்படம் வரும் 21-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 'அயல் பிறை' என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியது.