தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரந்தூா் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் வரும் அக்.13 ஆம் தேதி அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் செட்டிப்பேட்டை சிஐடியு அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பரந்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நெல்வாய் கிராமத்தை சோ்ந்த பி.குணசேகரன் தலைமை வகித்தாா். சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் கே.நேரு, மாவட்டத் தலைவா் சாரங்கன் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவா் பெ.சண்முகம் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா் (படம்).
இக்கூட்டத்தில் மச்சேந்திரநாதன் குழுவினரின் அறிக்கையை அரசு வெளியிட வேண்டும், விமான நிலையம் அமையவுள்ள பாதிக்கப்படப்போகும் 8 கிராமங்களிலும் விவசாயிகளின் வீடுகளில் வரும் அக்.13-ஆம் தேதி கருப்புக்கொடி ஏற்றுவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் வட்டார விவசாயிகள் வாழ்வாதாரக் குழுவும் அமைக்கப்பட்டு அதன் ஒருங்கிணைப் பாளராக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் கே.நேருவை நியமித்தும் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.