இந்தியாவில் மதச்சார்பின்மை அவசியமற்றது என கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் இன்று(செப்.23) நடைபெற்ற ஹிந்து தர்ம வித்யா பீடம் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “மதச்சார்பின்மை குறித்து பல மோசடி நபர்களால் இங்கு தவறான புரிதல் அளிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்றால் என்ன? இது ஐரோப்பிய கோட்பாடு, இது பாரதத்தின் கோட்பாடல்ல.
ஐரோப்பாவில் தேவாலயங்களுக்கும் அரசர்களுக்குமிடையே சண்டை மூண்டதால் மதச்சார்பின்மை தத்துவம் உருவெடுத்தது.
ஹிந்து தர்மத்திலிருந்து இந்தியா விலகியிருப்பது எப்படி சாத்தியம்? மதச்சார்பின்மை அங்கேயே(ஐரோப்பாவில்) இருக்கட்டும். இந்தியாவுக்கு மதச்சார்பின்மை கோட்பாடு தேவையில்லை” என்று பேசியுள்ளார்.
மதச்சார்பின்மை குறித்த தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் கருத்துக்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.