ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த இரு நாள்களில் மட்டும் 558 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதாரத் துறை இன்று (செப். 24) அறிவித்தது.
இதேபோன்று இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் 7 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன. இந்த கோர வெடிவிபத்துகளில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இத்தகைய தொழில்நுட்பத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2 நாள்களில் 558 பேர் பலி
ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற கட்டடத்தின் மீது இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் திங்கள் கிழமை (செப். 23) நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 500 பேர் கொல்லப்பட்டனர். 1,600 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து தெற்கு லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெய்ரூட் வழியாக இடம்பெயர்ந்தனர். இதனால் பெய்ரூட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஹிஸ்புல்லா – இஸ்ரேல் போரில் 2006-க்கு பிறகு நடந்த மிகப்பெரிய இடம்பெயர்வு இதுவாகும்.
இந்நிலையில் இஸ்ரேலின் இருநாள் தாக்குதல் குறித்துப் பேசிய லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர், ஃபிராஸ் அபியாத்,
''கடந்த இரு நாள்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 குழந்தைகள், 94 பெண்கள் என மொத்தம் 558 பேர் உயிரிழந்துள்ளனர். 1,835 பேர் படுகாயமடைந்துள்ளனர். லெபனானைச் சுற்றியுள்ள 54 மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது'' என்றார்.
கொல்லப்பட்டவர்களில் 4 மருத்துவர்கள் அடங்குவர். மேலும், மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் என 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.