தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியில் நேற்று(செப்.23) நடைபெற்ற ஹிந்து தர்ம வித்யா பீடம் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, மதச்சார்பின்மை குறித்துப் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
'மதச்சார்பின்மை என்பது ஐரோப்பியக் கோட்பாடு. ஐரோப்பாவில் தேவாலயங்களுக்கும் அரசர்களுக்குமிடையே சண்டை மூண்டதால் மதச்சார்பின்மை தத்துவம் உருவானது. இந்தியாவுக்கு அது தேவையில்லை' என்று பேசினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதையும் படிக்க | ஜனநாயகமும் ஐரோப்பிய கோட்பாடே… ஆளுநர் கருத்துக்கு சிதம்பரம் எதிர்வினை!
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில்,
அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்று அரசியலமைப்பின் செயலாளராக உள்ள ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் ஒரு அவமானம்.
இது அவர் வெளியிட்ட மூர்க்கத்தனமான, ஏற்றுக்கொள்ள முடியாத முதல் அறிக்கை அல்ல. மக்கள் என்ன எதிர்வினையாற்றுவார்கள் என இதுபோன்று தொடர்ந்து பேசி வருகிறார்.
பிரதமர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை ஆளுநர் செய்கிறார்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ராஜிநாமா செய்வாரா சித்தராமையா? கர்நாடகத்தில் என்ன நடக்கிறது?