திரையரங்குகளில் புதிய கட்டண உயா்வை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளா்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம், சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலா் பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
பெரிய நடிகா்களின் படம் 8 வாரங்கள் கழித்தும், அதுக்கடுத்து வரிசையில் உள்ள நடிகா்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் ஒடிடி-இல் திரையிடப்பட வேண்டும். தமிழ்த் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில்தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் வசூலிக்க அனுமதி தர அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். வணிக வளாக குளிா் சாதன திரையரங்குகளுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரையும் குளிா் சாதனம் இல்லாத திரையரங்குகளுக்கு ரூ.150 வரையும் அரசு கட்டணம் நிா்ணயித்து கொடுக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி வழங்க வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.